அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரமும் இனவெறியும் அமெரிக்காவில் மிகவும் பொதுவான சம்பவங்களாக மாறி விட்டன.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2022, 01:39 PM IST
அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்;  சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி title=

அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரமும் இனவெறியும் அமெரிக்காவில் மிகவும் பொதுவான சம்பவங்களாக மாறி விட்டன. சென்ற மாதம் அமெரிக்காவின் பிரபல நகரமான நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த துபாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர். 

இந்நிலையில், நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் தற்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கி ஏந்திய நபர், முதலில் 4 பேரை சுட்டுக் கொன்றார். பின்னர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து சரமாரியாக சுடத் தொடங்கினார்.

அமெரிக்காவின் நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில்  உள்ள,  பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமாக  நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர் 13 பேரை தாக்கியுள்ளார். அவர்களில் 11 பேர் கறுப்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய நபர், பாதுகாப்புப் பணியாளரை சுட்டுக் கொன்ற பிறகு, கடையில் இருந்த மற்றவர்களை நோக்கிச் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை பிற்பகல் நியூயார்க்கின் பஃபேலோவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து துப்பாக்கி ஏந்திய 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அவர் இணையத்தில் நேரிடையாக ஒளிபரப்ப செய்ய ஒரு கேமராவை பயன்படுத்தியதாகவும் போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியை அடைய,  பல மணி நேரம் பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாகாண கவர்னர் கேத்தி ஹோச்சுல் இது குறித்து கூறுகையில், 'தாக்குதல் நடத்திய நபர், இனவெறி பிடித்தவர் என்றும், அப்பாவி மக்களின் மீது வெறுப்பு காரணமாக செய்துள்ள இந்த  கொடூர செயலால், தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று நான் நம்புகிறேன்' என்றார்.

மேலும் படிக்க | அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; அதிர வைக்கும் தகவல்கள்

தாக்குதல் நடத்தியவர் பஃபலோவில் இருந்து தென்கிழக்கே 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்க்ளின், நியூயார்க்கில் வசிக்கும் பாட்டன் ஜென்ட்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். எதற்காக ஜென்ட்ரான் கான்க்ளினில் இருந்து பஃபலோவிற்கு வந்து தாக்குதலை நடத்தினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், அவர் தனது காரில் சூப்பர் மார்க்கெட்டை அடைவதைக் காணலாம்.

பஃபலோ நகர காவல் ஆணையர் ஜோசப் கிராமக்லியா கூறுகையில், போலீஸார்  துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க முயன்ற போது, அவர் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாக மிரட்டினார் எனவும், பின்னர் போலீஸார் சமாதானப்படுத்தியதையடுத்து, அவர் சரணடைய ஒப்புக்கொண்டார் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பது சாமானியர்களின் அரசியலமைப்பு உரிமைகளில் ஒன்றாகும். இதனால்  துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. 2021 ஆம் ஆண்டும் இதே போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்கா மனித உரிமைகள் பற்றிய பாடங்களை உலகிற்கு கற்றுக் கொடுக்கும் நிலையில், அதை தனது சொந்த நாட்டில் பின்பற்ற முடியாமல் இருக்கிறது என்பது தான்.

மேலும் படிக்க | India - US 2+2 Dialogue: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்; உறுதியாக பேசிய இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News