முகத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள வீட்டில் Fruit-Facial செய்வது எப்படி?

ஃப்ரூட்  ஃபேசியலை வீட்டிலேயே செய்து, சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கலாம். அதற்கான சில குறிப்புகளைக் கீழே கொடுத்திருக்கிறோம். இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ளுங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2020, 08:52 PM IST
முகத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள வீட்டில் Fruit-Facial செய்வது எப்படி? title=

அழகு குறிப்புகள்: லாக்-டவுன் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக சருமப் பராமரிப்பு என்பது மிக சுலபமான ஓன்றாக  இருந்திருக்கலாம். அழகு நிலையத்திற்குப் போனால் போதும், அழகிற்கு மெருகூட்டிக் கொண்டு வரலாம். ஆனால் கொரோனா காலத்தில் வெளியே செல்வது பாதுகாப்பானதல்ல என்பதால், மெருகூட்டும் மற்றும் தள்ளிப்போடக்கூடிய பணிகள் அனைத்துமே முக்கியத்துவம் இழந்துவிட்டன. பணிகள் அனைத்தையும் நாமே செய்ய வேண்டும். அதேநேரத்தில் பெருந்தொற்றின் பாதிப்பை தவிர்ப்பதற்காக சமூக விலகல் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இந்த சிக்கலான நேரத்தில், நமது அழகை நாமே பராமரித்து கொள்வது நல்லது. நாம் சுயசார்புடையவர்களாக இருப்பது அவசியமான காலகட்டம் இது. தன் கையே தனக்கு உதவி என்பதும் நிதர்சன உண்மையாகி விட்டது. இது கடினமானது இல்லை. ஒரு சில பொருட்களைக் கொண்டு சுலபமாக எப்படி நமது அழகை நாமே மெருகூட்டுவது என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 

பழங்களை உண்டால் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆரோக்கியத்திற்கு அடிப்படையான பழங்களைக் கொண்டு, "ஃப்ரூட்  ஃபேசியலை" வீட்டிலேயே செய்து, நமது அடிப்படையான அழகை மேம்படுத்தி, புத்துணர்சியை பெறுவோம்.

முதலில் முகத்தை சுத்தம் செய்துக் கொள்ளவும்:

முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதற்காக நன்றாக சுத்தம் செய்யவேண்டும். தண்ணீர் மற்றும் காய்ச்சாத பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் தண்ணீரால் முகத்தைக் கழுவவும், பிறகு, காய்ச்சாத பாலை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்த பிறகு, தண்ணீரால் கழுவவும்.

எக்ஸ்போலியேட்:

இறந்த சரும செல்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு ஒரு ஸ்க்ரப் தேவை. வீட்டிலேயே ஸ்க்ரப்பரை தயாரிக்க, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி  5 நிமிடங்களுக்குப் பிறகு துடைக்கவும்.

சருமத்தின் துளைகளை திறக்க வேண்டும்:

உங்கள் சருமத்திற்கு காற்றோட்டம் அவசியம். சருமத்தை சுவாசிக்க அனுமதிப்பது முக்கியம். அதற்காக அவ்வபோது சருமத் துளைகளை திறக்க வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் சூடான நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு போர்வையால் தலையை மூடிக்கொண்டு, நீராவி பிடிக்கவும். நீராவி சருமத்திற்குள் நுழைந்து, மூடப்பட்டிருக்கும் துளைகளை திறந்துவிடும்.

ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை:

ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு வகையைச் சேர்ந்த்தாக இருக்கும். அதற்கேற்ற ஃபேஸ் பேக்கை தயாரிக்க வேண்டும். வறண்ட சருமம் கொண்டவர்கள் தேன் மற்றும் வாழைப்பழத்தை கொண்டு ஃபேஸ் பேக்கை  தயாரிக்க வேண்டும். நடுத்தர வயதினர் சருமத்தை மிருதுவாக்க, ஆன்டி-ஏஜிங் பேக் பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தின் கூழ் மற்றும் தேன் கலந்த பேக்கை அவர்கள் பயன்படுத்தலாம். 

எண்ணெய்ச் சருமம் கொண்டவர்கள் பெர்ரி மற்றும் எலுமிச்சை கலந்த பேக்கை பயன்படுத்தலாம். தயாரித்த ஃபேஸ் பேக்கை முகத்திலும் கழுத்திலும் பரவலாக பூசவும். 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்த பிறகு, குறைந்தது ஐந்து நிமிடங்கள் கழித்த பிறகு, குளிர்ந்த நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

இப்போது உங்கள் சருமம் பொலிவு பெற்று இளமையாக மின்னும். முடக்க நிலையை மேற்கொண்டு வீட்டில் முடங்கிக் கிடந்தாலு, நமது தோற்றப் பொலிவை வளத்துடன் வைத்துக் கொள்வது சுலபமானதே.

(மொழியாக்கம் -  நகரி அரிஹரன்)

Trending News