தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள்! முக்கிய முடிவு எடுத்துள்ள திமுக!

திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 22, 2024, 02:38 PM IST
  • திமுக, அதிமுகவில் நிர்வாகிகள் மாற்றம்.
  • ஜூன் மாதம் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு.
  • தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை.
தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள்! முக்கிய முடிவு எடுத்துள்ள திமுக! title=

நாடாளுமன்றத்தின் முதற்கட்ட வாக்குப்பதிவு குறுகிய பிரச்சார காலத்திலேயே கடந்த 19ஆம் தேதி நடந்து  முடிந்திருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் என தமிழகத்தில் நான்கு முனை போட்டி என சொல்லப்பட்டாலும் திமுக, அதிமுக, பாஜக இடையே தான் அதிக போட்டி காணப்பட்டது. குறிப்பா திமுக அதிமுக 39 தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தன. திமுக தரப்பில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகளின் பொறுப்பாளர்களாக நியமித்தார் ஸ்டாலின். அதிமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர்கள் என தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தார் EPS.

மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

இரு தரப்புமே நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ள தொகுதியில் சாதக பாதங்களை பொருத்தே நடவடிக்கையோ அல்லது பாராட்டோ இருக்கும் என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த எச்சரிக்கைகளை எல்லாம் மீறி இரு தரப்பிலுமே பொறுப்பாளர்கள் சுணக்கம் காட்டி இருப்பது தலைமையை கோபப்படுத்தி உள்ளது. கொங்கு மண்டலத்தில் பின்னலாடைக்கு பேர் போன நாடாளுமன்ற தொகுதியில் இருதரப்பு பொறுப்பாளர்களுமே வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தலைமைக்கு புகார் சென்று இருக்கிறது. திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் வெற்றி பெற்றாலும் சென்ற முறை போல அதிக வாக்கு வித்தியாசம் வர வாய்ப்பில்லை என்கிறார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தான் ஆளும் தரப்பு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சுணக்கம் காட்டியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறார்கள்.

நாமக்கல் தொகுதியிலும் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் மீது கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் நேரடியாக திமுக தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார் அதன் பிறகு பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. முக்கிய தொகுதியாக பார்க்கப்பட்ட கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் இதே நிலைதான் தொகுதிக்கு பொறுப்பாளராக வந்த அமைச்சர் டி ஆர் பி ராஜாவும் மற்ற வெளி மாவட்ட நிர்வாகிகள் பார்த்த வேலையை கூட சொந்த மாவட்ட செயலாளர்கள் பார்க்கவில்லை என திமுக தொண்டர்களே ஆதங்கப்படுகிறார்கள். வேட்பாளர் அறிவித்ததில் இருந்தே ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் முத்துசாமி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வேட்புமனு தாக்கலின் பொது கூட தொகுதியின் அமைச்சர் என்ற முறையில்  வேட்பாளர் உடன் செல்லாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தேர்தல் பணிகளிலும்  சொதப்புவதாக தலைமைக்கு புகார் சென்றது.

இதே போல நெல்லை ராமநாதபுரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தேர்தல் பணிகளில் சுணக்கமும் காட்டி வந்திருக்கின்றனர். இந்த புகார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் தான் சுணக்கம் காட்டிய நிர்வாகிகளை கண்டித்த திமுக தலைமை அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரை சில தொகுதிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதிமுக தரப்பிலும் இதே நிலைதான் தான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்பு வரும் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஈபிஎஸ். பெரும்பாலான தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர செய்யவில்லை என்பது EPS யை கோபமடைய செய்திருக்கிறது.

குறிப்பாக டெல்டா மண்டலத்தில் வரும் நாடாளுமன்ற தொகுதிகளில் தான் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள். பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஓ எஸ் மணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யவில்லை என அதிமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி வேலூர் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி திருப்பூர் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் நெல்லை தொகுதி பொறுப்பாளர் இசக்கி சுப்பையா என ஒரு பெரிய பட்டியலே அதிமுக தலைமைக்கு புகாராக அந்தந்த தொகுதி நிர்வாகிகள் அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கும் ஒரு படி மேலாக ஈரோடு தொகுதி வேட்பாளர் மீதே சில நிர்வாகிகள் அதிமுக தலைமைக்கு புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின்பாக கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை சந்தித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்த விபரங்களை கேட்டிருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. திமுக அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு  அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | 'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...' அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் - இபிஎஸ் நறுக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News