கச்சத்தீவில் திடீரென முளைத்த புத்தர் கோயில்: இலங்கை பாராளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்.!

இந்தியா வசமிருந்த கச்சத்தீவு 1976ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு மனிதர்கள் வசிக்காத பகுதி என்ற போதும், அங்கிருந்த அந்தோணியார் கோயிலே தீவின் அடையாளமாக மாறியிருந்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 01:15 PM IST
  • மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.
  • ஆண்டு தோறும் நடைபெறும் இத்திருவிழாவிற்காக இந்திய அரசு சார்பில் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்தது.
கச்சத்தீவில் திடீரென முளைத்த புத்தர் கோயில்: இலங்கை பாராளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்.! title=

கச்சத்தீவில் புத்தர் சிலையை வைத்தது யார் என்றும், அந்த சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் மட்டுமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால், இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என கேள்வி எழுந்துள்ளது. கச்சத்தீவில் திடீரென வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி.யால் முன்வைக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவில் புத்தர் சிலை எப்படி வந்தது

இந்தியா வசமிருந்த கச்சத்தீவு 1976ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு மனிதர்கள் வசிக்காத பகுதி என்ற போதும், அங்கிருந்த அந்தோணியார் கோயிலே தீவின் அடையாளமாக மாறியிருந்தது. முன்பு இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் வலைகளை காய வைக்க பயன்படுத்திய தீவு தற்போது, இலங்கை கடற்படையின் சிறு முகாம் செயல்படும் இடமாக மாறியுள்ளது.

இந்நிலையில் தான் மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆண்டு தோறும் நடைபெறும் இத்திருவிழாவிற்காக இந்திய அரசு சார்பில் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை இலங்கை கடற்படை ஒருங்கிணைத்து நடத்தியது.

இந்தியாவிலிருந்து சென்ற பக்தர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்த நிலையில், குடிநீர் உணவும் கூட முறையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இந்தியாவிலிருந்து சென்ற 2,281 பேரின் வருகையை பதிவு செய்ய ஒரே ஒரு கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் இதனால் 4 மணி நேரம் கடற்கரை வெயிலில் காத்திருக்க நேர்ந்தது எனவும் தமிழகத்திலிருந்து சென்று வந்தவர்கள் புகார் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | இலங்கையில் உணவு நெருக்கடி... இந்தியாவிடம் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

இலங்கை கடற்படையின் முழு கண்காணிப்பில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தீவில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன், பொருளாதார மீட்சியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்பை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என கூறினார். இந்திய அரசு கச்சத்தீவு விழாவுக்காகவும் 4 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், இந்திய குடிமக்களை நடத்திய விதம் கண்டிக்கத் தக்கது எனவும் அவர் பேசியுள்ளார்.

கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு வழங்கும் போது ஆலயத்துடனேயே வழங்கியுள்ளனர். அந்தோணியார் ஆலயம் மட்டுமே தீவில் இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால், இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது கேள்வியாகவுள்ளது. இலங்கையில் இருப்பவர்களுக்கும், தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் அது அந்தோணியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும் என கூறினார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பவுத்த அடையாளங்கள் கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டிய சார்ள்ஸ், இந்த செயல் கச்சத்தீவையும் விட்டு வைக்கவில்லை என்பதையே காட்டுவதாக கூறினார். கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று கூட பதிலளிக்கலாம் ஆனால் இது ஏற்புடையது அல்ல என சார்ள்ஸ் கூறினார்.

மேலும்,கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவின் போது புத்தர் சிலை இருந்த இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கச்சத்தீவில் இலங்கை கடற்படைக்கென தனி தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே தான் சுற்றிலும் ஓலைகள் வேயப்பட்டு, புதர்ச்செடிகளால் மறைக்கப்பட்டு புத்தர் சிலையும் மற்ற பவுத்த மத சின்னங்களும் நிறுவப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News