ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!

Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2024, 03:31 PM IST
  • கர்நாடகாவில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • நாடு முழுவதும் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7இல் நடைபெறுகிறது.
  • ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி! title=

Rahul Gandhi Lok Sabha Elections 2024: 18வது மக்களவை தேர்தலின் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராகுல் காந்தி இன்று அவரது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ராகுல் காந்தியிடம் ஒருவர் கேள்வி கேட்கிறார், அதேபோல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரிடம் கேள்வி எழுப்பும் விதமாகவும் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

ஏன் வெள்ளை டி-சர்ட்?

இதன்மூலம், இந்த வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதில் ஏன் எப்போதும் வெள்ளை டி-சர்டை மட்டும் அணிகிறீர்கள் என ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"வெளிப்படைத்தன்மையும், எளிமையும்தான். உடைகள் குறித்து பெரியளவில் கவனம் செலுத்த மாட்டேன். எளிமையானதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்" என்றார். அதன்பின் அவர் ஹெலிகாப்டரில் ஏறிச்செல்வது தெரிகிறது. 

மேலும் படிக்க | அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி.... யார் இந்த கிஷோரி லால் சர்மா?

தொடர்ந்து, ராகுல் காந்தி கார்கேவிடம் நேரில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, இந்த பிரச்சாரத்தில் எது நல்லதாகவும், எது மோசமானதாகவும் தெரிகிறது என கேள்வியெழுப்பினார். அதற்கு,"மோசமானது என எதுவுமில்லை. நாட்டிற்காக இதை அனைத்தையும் செய்கிறோம் என்பதே நல்லதாக தெரிகிறது. நாட்டை கெடுத்துவரும் ஒருவரை, அவரை நாம் தடுத்துவிட்டோம் என்றால் நல்லதாக இருக்கும். இருப்பினும், குறைந்தபட்சம் நாட்டிற்கு நல்ல செய்கிறோம்" என்றார் கார்கே.

அதிகாரமா... சித்தாந்தமா...?

தொடர்ந்து கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோர் காரில் சென்ற போது பேசிய உரையாடலும் இதில் இடம்பெற்றுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதில், "உங்களுக்கு அதிகாரமா அல்லது சித்தாந்தமா என கேட்டால் எதை தேர்வு செய்வீர்கள்" என கேட்டதற்கு 'நிச்சயம், சித்தாந்தம்தான்... சித்தாந்தம் எப்போதும் முக்கியமானது. கட்சியின் சித்தாந்தத்தையும், கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் நாம் வைக்க வேண்டும். மேலும் நீங்கள் அதிகாரத்தில் இருந்தால் நமது சாதனைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும். அப்போதுதான் நமது நிலைப்பாட்டை மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள், அவர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள்" என்றார். இதற்கு கார்கே,"அதிகாரம் வரும் போகும். ஆனால் சித்தாந்தத்திற்கு உண்மையாக இருப்பதுதான் பெரிய விஷயம். நமது தலைவர்கள் சித்தாந்தத்திற்காக தியாகம் செய்துள்ளனர்" என்றார்.

ராகுலின் கருத்து

இதற்கு தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,"கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோருடன் நான் இதில் உடன்படுகிறேன். என்னை பொறுத்தவரையில, நீங்கள் சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நீங்கள் அதிகாரத்தை நோக்கியும் செல்ல முடியாது, ஒரு பெரிய அமைப்பாகவும் செல்ல முடியாது. மேலும் நமது சித்தாந்தத்தை நாம் மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஏழைகளுக்காகவும், பெண்களுக்காகவும், அனைவரையும் சமமாக நடத்துவதற்காகவும் நாம் உழைக்க வேண்டும். எனவே ஒரு அமைப்பு அளவில், அதுவும் தேசிய அளவில் அரசியல் போராட்டம் எப்போதும் கருத்தியல் சார்ந்ததுதான்" என்றார். 

கர்நாடகாவில் மக்களவை தேர்தல்

தொடர்ந்து கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 2 கட்டங்களாகவே தேர்தல் நடைபெறுகிறது. அதில் 14 தொகுதிகளில் கடந்த ஏப். 26ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள 14 தொகுதிகளில் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். 

2019ஆம் ஆண்டு இந்த 28 தொகுதிகளில், 25 தொகுதிகளை பாஜக மொத்தமாக வென்றது. கடந்த முறை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தலா 1 தொகுதியையே வென்றது. இந்த முறை பாஜக மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதகளில் போட்டியிடுகிறது. 

மேலும் படிக்க | கைதானார் ஹெச்.டி. ரேவண்ணா... பெண் கடத்தல் புகாரில் போலீசார் நடவடிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News